அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக \"இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?\" என்று கூறிக்கொள்கின்றனர்.
\"என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்\" என்று அவர் கூறினார்.
அப்படியல்ல! \"இவை கலப்படமான கனவுகள்\" இல்லை, \"அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்\" இல்லை, \"இவர் ஒரு கவிஞர்தாம்\" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்\" என்றும் கூறுகின்றனர்.
(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே \"(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்\" (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
\"விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக\" (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).
வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? \"அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன\" என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; \"நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்\" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
அவர்கள்; \"அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்\" என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இன்னும், அவர்களில் எவரேனும் \"அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்\" என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
இன்னும்; இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் எனறென்றும் வாழப் போகிறார்களா?
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், \"உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?\" - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.
தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.
இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்ப பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்நது கொண்டது.
\"உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?\" என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட் காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம். நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
\"நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்\" என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், \"எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்\" என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
\"அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்\" என்று (இப்ராஹீம்) கூறினார்.
அதற்கு (அவர்களில் சிலர்) \"இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது\" என்று கூறினார்கள்.
அதற்கு அவர் \"அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்\" என்று கூறினார்.
(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) \"நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்\" என்று பேசிக் கொண்டார்கள்.
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; \"இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!\" (என்று கூறினர்).
(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்\" என்று கூறினார்கள்.
இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களைக் புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் \"நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்\" என்று பிரார்த்தித் போது,
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
இன்னும் (நினைவு கூர்வீராக); துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார் எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து \"உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்\" என்று பிரார்த்தித்தார்.
இன்னும் ஜகரியா தம் இறைவனிடம் \"என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்\" என்று பிரார்த்தித் போது
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்;) \"எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்\" (என்று கூறுவார்கள்).
நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)
எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம் இதனை செய்வோம்.
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; \"நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
\"எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்; 'உங்கள் நாயன் ஒரே நாயன் தான்' என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?\" (என்று நபியே!) நீர் கேட்பீராக!
ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் \"நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்\" என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.